Thursday, December 7, 2023

 காது

செவிச் செல்வம்

நம்ம நாட்டுல பிறந்த குழந்தைக்கு ஆண் பெண் யாராக இருந்தாலும் முக்கியமான முதல்சடங்கு அல்லது விழா காது குத்து கல்யாணம் என்கிற காதணி விழா தான். எல்லா குலத்திலும் எல்லா தட்டு மக்களும் இமயமுதல் குமரி வரை ( இந்து மக்கள்) அந்த விழா உண்டு.

ஆனால் தன்னை ஏமாற்றுகிறாயா என்பதற்கு பாமரனும் கேட்பது “ என்ன காது குத்தறையா? “ என்பதுதானே! அதனால் தானோ என்னவோ பல பெண்கள் மற்றவர்கள் தனக்கு காது குத்த இடமில்லாமல் இடம் கொடுக்காமல் தானே காது முழுக்க நிறைய குத்தி விதவிதமா தோடு போட்டுக் கொள்கிறார்களோ!!🤪

என்னவோப்பா ஒன்னும்புரியல?

குழந்தைக்கு காது குத்தி, மொட்டைபோட்ட குழந்தைக்கு கோவிலில் பிரசாதமாக கொடுக்கும் பூவையோ துளசியையோ காதுலதானே வைப்போம்! பெரியவர்கள்கூட முன்புகோவிலில் கொடுத்த பூவையோ துளசியையோ காதிலேதானே வச்சிகிட்டாங்க!

இப்போ என்னவோ இதற்கு அர்த்தம் மாறி போச்சு. ஏமாத்த பாக்கறத்துக்கு பூ வைப்பதாச்சு.”

“ஏமாந்தா பூ என்ன பூந்தோட்டமே காதுல வைப்பாங்க” அப்படீங்கறாங்க!💐

என்னவோப்பா ஒன்னும் புரில.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்தியெல்லாம் தலை

வள்ளுவர் குறளை சொல்பவர்கள் ஏன் எதிர்மறை சொல்லுக்கு “காது” சேர்கறாங்கனு புரியல. உதாரணத்திற்கு

பார்க்’காது’,  போ’ காது”,  கொடுக்”காது “,மயங்”காது”. என்னமோ போங்க ஒண்ணும் புரியல.😧

காதுங்கறது கேட்க மட்டுந்தானா?  விதவிதமா தோடு,ஜிமிக்கி, தொங்கட்டான், வலையம் போட்டு அழகு பார்க்கவும் தான். அப்பறம் தோடு, ஜிமிக்கி எடைதாங்காம தொங்காம  மாட்ட மாட்டலும் காதில்தான். இதுமட்டுமா மூக்கு கண்ணாடி(கண்ணுக்குதான் என்றாலும்) மாட்டுவதென்னவோ காதில்தான். “கே” என்ற இனிசியல் போட்ட காது கார்ர்கள்(கே.காது) காது கருவி hearing aid மாட்டுவதும் இதில்தானே. கொரானா காலத்தின் கொடை முக கவசம் mask க்கும் அடைகலம் காதுதான். 😷எத்தனைதான் தாங்கும். 

சில வருடங்கள் முன் ஒரு Phillips விளம்பரம். சத்தமே இல்லாமல் ஒரு பெண் ஆடுவாள். முடித்த பின் காதிலிருந்து ஒரு சின்னகருவியை எடுப்பாள். அதன் வழியே கேட்ட இசைக்கு ஆடினாளாம். விளம்பரத்திற்காக எப்படிலாம் காதுல பூ சுத்தறானு நெனச்சேன்.. அப்பறந்தான் அது பேர் நீல பல்(blue tooth)னு சொன்னாங்க. இப்ப யாரப்பாத்தாலும் அத தான் மாட்டிகிட்டு பஸ்ஸிலோ, ரயிலிலோ அவரவர் தனி உலகத்தில இருக்காங்க. 🤔

என்னவோப்பா ஒண்ணு புரியல.😲

வீட்டிலயும் இதுமாதிரி ஒன்னு தலை பேசி(head phone) மாட்டிகிட்டு காரிய செவுடா இருக்குங்க. எது சொன்னாலும் காதில் ஏறாது.

இத எந்நேரமும் மாட்டிகிட்டு இருந்து செல்வத்துள் செல்வம் செவி செல்வத்தை வரும் தலைமுறையினர் தொலைத்து விடுவார்களோனு கவலையா சங்கடமா இருக்கு.

என்னோப்பா ஒன்னும் புரியல.🙄

              ஆனந்தி




No comments:

Post a Comment