Wednesday, May 9, 2012

கடன் அனைவருக்கும் தீங்கு

கடன் அனைவருக்கும் தீங்கு  
 
சிக்கனம் தன் சேமிப்புக்காக அல்ல, பரோபகாரத்துக்காகவே என்பது போலவே, கடன் வாங்காமலிருப்பதும் தன் நன்மையைக் கருதி மட்டுமில்லாமல் பரோபகார உத்தேசத்தின்மீதே இருக்க வேண்டும். கடன் பட்டுவிட்டால் அதை அடைப்பதற்கே பாடுபடுவது ஒரு கடன் அடைந்த பிறகு ஏற்கெனவே கடன் வாங்கின பழக்கத்தில் மறுபடி மறுபடி கடனுக்குப் போவது என்றுதான் அனர்த்தமாகப் போய்க்கொண்டிருக்கும். இப்படி தனக்கே இல்லாத நிலையை உண்டாக்கிக் கொண்டால் பிறருக்கு எப்படிச் செய்வது?  
 
ஆசார்யாள் 'ப்ரச்நோத்ர ரத்ன மாலிகா'என்று கேள்வியும் பதிலுமாக ஒரு புஸ்தகம் எழுதியிருக்கிறார். அதிலே ஒரு கேள்வி, ''உலகத்தில் தீட்டாக ஆவது எது?''என்பது:'' கிமிஹ ஆசௌசம் பவேத் ?''  
 
சுசி என்றால் சுத்தம். அசுசி (என்றால்) அசுத்தம். அசுசியுள்ளது ஆசௌசம். தேவ கார்யங்களுக்கு உதவாத படி ஆக்குகிற சாவுத் தீட்டு, பிரஸவத் தீட்டு முதலானவற்றையே சாஸ்திரங்களில் ஆசௌசம் என்று சொல்லியிருக்கிறது. இங்கே, சிஷ்யன் ''ஆசௌசம் எது?''என்று கேட்பதாகவும், அதற்கு குரு பதில் சொல்வதாகவும் ஆசார்யாள் சொல்லுகிறார். அந்தப் பதில் என்ன?  
 
ருணம் ந்ருணாம்  
 
''ந்ருணாம்''என்றால் ''மநுஷ்யனுக்கு'', ''மநுஷ்யனாகப் பிறந்த எல்லாருக்கும்''என்று அர்த்தம். ''ருணம்''என்றால் 'கடன்', ''மநுஷ்ய ஜன்மா எடுத்தவனுக்குப் பெரிய தீட்டு கடன் படுவதுதான்''என்று ஆசார்யாள் சொல்கிறார். ஏன் அப்படிச் சொன்னார்? (Contd...)
''ஜன்மாந்தர கடன்காரன்''என்று சொல்கிற போதும் பூர்வஜன்மத்தில் நாம் ஒருத்தனால் பெற்றதைத் திரும்ப நம்மிடமிருந்து வாங்கிக்கொள்ள அவன் வந்திருக்கிறான் என்றே அர்த்தம். ஒருத்தன் கடன் படுவதனால், கடன் படுகிறவன் மட்டுமில்லாமல் கடன் தருகிறவனும் கஷ்டத்துக்கு ஆளாகிறான் என்று சொல்ல வந்தேன். இப்போது நவீன 'ஐடியாலஜி'போய்க்கொண்டிருக்கிற போக்கில் கடன் கொடுத்தவர்தான் அதிகக் கஷ்டத்துக்கு ஆளாகவேண்டியிருக்கிறது. ஸர்க்காரே கடன் வாங்கிப் பெரிய பெரிய திட்டம் போடுவதாக இருப்பதால் போலிருக்கிறது, கடன்பட்டவர்களுக்குத்தான் இப்போது ஸர்க்காரில் எல்லா சலுகையும்!வெளி தேசங்களில் உள்ள லக்ஷரிகள்தான் இப்போது நம் ஸர்க்காருக்கு 'டார்கெட்' (குறிக்கோள்) !வாஸ்தவத்தில் தேசத்தில் திருப்தியும் ஆத்யாத்மிகமான அபிவிருத்தியும் ஏற்பட வேண்டுமானால், ஜனங்களுக்கு இடையில் பொறாமையும் போட்டிகளும் போகவேண்டுமானால், 'வாழ்க்கைத் தரம்'என்று சொல்வதைக் குறைப்பதற்குத் தான் திட்டம் போடவேண்டும். ஆனால் வாழ்க்கைத் தரத்தை மேல் நாடுகளின் தரத்துக்கு உயர்த்தியே தீரவேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டு வேண்டாத வஸ்துக்களை அத்யாவசியத் தேவையாக ஆக்குவதற்கே ஸர்க்கார் திட்டம், திட்டம் என்று ஓயாமல் போட்டுக் கொண்டிருக்கிறது (Contd...)
கடன் கொடுத்தவன் எப்படியெல்லாம் கடின சித்தனாகிக் கொடுமை பண்ணுகிறான் எனபதும் எனக்குத் தெரியாமலில்லை. அநியாய வட்டி வாங்குவது, எத்தனை திருப்பினாலும் அசலில் கழித்துக் கொள்ளாமல் வட்டியிலேயே கழித்துக் கொள்வது என்று அவர்களும் அநேக அக்ரமங்கள் பண்ணத்தான் பண்ணுகிறார்கள்.  
 
கடன் வாங்குவது என்ற தப்பை ஒருவன் பண்ணுவதால்தான் இப்படி இன்னொருத்தன் (கடன் கொடுப்பவன்) பாவம் செய்பவனாக ஆகிறான். கடைசியில் ஸர்க்கார் அவனுக்கு நாமம் போடுகிறபோது அவனும் கஷ்டப்படுகிறான்.  
 
ஆதலால், அடிமுதலில் எவனானாலும் கடன் என்றே போகாமல் தன் வருவாயில்தான் காலம் தள்ளுவது என்று ஆக்கிக்கொள்ள வேண்டும்.கடன் கஸ்தியால்தான் அநேகர் திருடர்களாவது போலி ஸந்நியாஸிகளாகி ஊரை ஏமாற்றுவது. மானஸ்தர்களில் பலர் குடும்பத்தோடு பிராணஹானி பண்ணிக் கொள்வதாகவும் அவ்வப்போது பேப்பரில் பார்க்கும்போது மனஸ் வேதனைப்படுகிறது.  
 
முன்னயே சொன்ன மாதிரி கடன் கொடுத்தவன், கடன் பட்டவன் என்ற இரண்டு பேர் மட்டுமில்லாமல் ஊரார் எல்லாருமே ஒருவன் கடனாளி என்றால் ''அவன் எங்கே நம்மை உபத்ரவம் பண்ண வருவானோ?''என்று ஓடும்படியிருக்கிறது. கடன் பழக்க்த்தினால் இப்படி லோகம் முழுக்க சிரமங்கள் ஏற்படுவதால்தான், இந்த லோகத்திலேயே அதுதான் பெரிய தீட்டு என்று ஆசார்யாள் தீர்ப்புப் பண்ணிவிட்டார். பரோபகாரம் என்பதைச் சொல்லும்போது, உபகாரம் பண்ணாவிட்டாலும் பர அபகாரம் எப்படியெப்படிப் பண்ணாமலிருக்க வேண்டும் என்றும் சொல்ல வேண்டுமல்லவா? Ten Commandments (கிறிஸ்தவர்களின் பத்துக் கட்டளைகள்) கூட எல்லாமே negative -ஆகத்தானே (இன்னின்னவற்றை செய்ய வேண்டும் என்பதற்குப் பதில் கூடாது என்பதாகத்தானே) இருக்கின்றன! வைதிகமான ஸாமான்ய தர்மங்களிலுள்ள அஸ்தேயம் (திருடாமை) , யோக சாஸ்திரத்திலுள்ள அபரிக்ரஹம் (பொருள் சேர்த்துக்கொள்ளாமை) என்பதாக 'நெகடிவ்'ஆக உள்ள இரண்டுமே பரோபகாரத்துக்கு அங்கம்தான். இந்த இரண்டையும் பின்பற்றினால் கருமித்தனம், ஊதாரித்தனம், கடன் வாங்குவது எல்லாமே போய்விடும்

No comments:

Post a Comment